பச்சிளங் குழந்தை (#11321)

பிரபுவே, எனதாண்டவரே, நீர் போற்றப்படுவீராக! இச்சிறுவன் உமது மென்கருணை, அன்புமிகு அருள் எனும் மார்பிலிருந்து உணவளிக்கப்-படுமாறும் அவன் உமது விண்ணுலக விருட்சங்களின் கனிகளைக் கொண்டு ஊட்டம் அளிக்கப்படுமாறும் தயை கூர்ந்து அருள்வீராக. நீரே, உமது மாட்சிமைமிகு நல்விருப்பம், சக்தி ஆகியவற்றின் ஆற்றல்வழி அவனைப் படைத்துத் தோற்றுவித்துள்ளீர் என்ற காரணத்தினால் அவனை உமது பராமரிப்பிலல்லாது வேறெவரது பராமரிப்பிலும் இருக்க விடாதீர். சர்வ வல்லவரும், சர்வஞானியுமான அவரைத் தவிர, இறைவன் வேறெவருமிலர். 

என் அதிபெரும் நேசரே, நீர் போற்றப்படுவீராக. உமது உயரிய அருள்பாலிப்பெனும் இனிய மணங்களையும் உமது புனித அருட்கொடைகள் எனும் நறுமணங்களையும் அவன்பால் வீசிட அருள்வீராக. நாமங்கள், பண்புகள் எனும் இராஜ்யத்தினை உமது பிடியில் வைத்திருப்பவரே, உமது அதிமேன்மைமிகு நாமத்தின் நிழலின்கீழ் பாதுகாப்பினைத் தேடிட அவனுக்குச் சக்தியளிப்பீராக. மெய்யாகவே, விரும்பியதைச் செய்திடும் ஆற்றல் படைத்தவர் நீரே; உண்மையிலேயே நீர் வலிமை மிக்கவர், மேன்மைப்படுத்தப்பட்டவர், என்றும் மன்னிப்பவர், கிருபையாளர், உதாரகுணம் மிகுந்தவர், கருணை மிக்கவர்.

-Bahá'u'lláh
-----------------------

பச்சிளங் குழந்தை (#11322)

ஒப்பற்ற இறைவா! இப்பச்சிளங் குழந்தை உமது அன்புப் பரிவு என்னும் மார்பினில் பேணி வளர்க்கப்படுமாக. அது உமது பாதுகாப்பு, ஆதரவு எனும் தொட்டிலில் காப்பாற்றப்படவும் உமது மென்மைமிகு பாசமெனும் கரங்களில் வளர்க்கப்படவும் அருள்வீராக.

-`Abdu'l-Bahá
-----------------------

பச்சிளங் குழந்தை (#11323)

இறைவா, இச்சிசுவினை உமது அன்பெனும் நெஞ்சினில் வளர்த்து, உமது அருள்பாலிப்பு என்னும் மார்பிலிருந்து அதற்குப் பாலூட்டுவீராக. உமது அன்பு என்னும் ரோஜாத் தோட்டத்தில் இப்புதிய செடியினைப் பேணி வளர்த்து, உமது அருட்கொடை என்னும் மழைப் பொழிவின் வழி அது வளர்ந்திட உதவுவீராக. உமது இராஜ்யத்தின் ஒரு குழந்தையாக அதனை ஆகச் செய்து, உமது விண்ணுலக ஆட்சியின்பால் அதனை வழிநடத்திச் செல்வீராக. சக்தி வாய்ந்தவரும் அன்பானவரும் நீரே. வழங்குபவரும் தாராளத் தன்மையுடையவரும் நீரே. ஒப்பற்ற வள்ளன்மைமிகு பிரபுவும் நீரே.

-`Abdu'l-Bahá
-----------------------

